பலகை

செப்டம்பர் 25, 2006

படிக்கட்டுப் பயணம்

Filed under: கவனித்தவை,சமுதாயம் — சுப்புடு @ 7:57 பிற்பகல்

இன்று பேருந்தில் பயணம் செய்யும்போது, திடீரென ஒரு நிறுத்தத்தில் பேருந்தின் முன்பகுதியில் கூச்சல், குழப்பம். வண்டியை ஓரமாக நிறுத்தி இன்ஜினை நிறுத்திய ஓட்டுனர், படிக்கட்டு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு விடலைச் சிறுவனை ‘பளார்’ என்று ஒரு அறை விட்டார். அடுத்து அவனை வண்டியிலிருந்து கீழே தள்ளி அடித்து அடித்தே பேருந்தின் பின் வாயில் வரை ரோட்டில் தள்ளி வந்தும் விட்டார்.

விஷயம் வழக்கமானதுதான் – படிக்கட்டுப் பயணம்! ஆனால் எல்லாரும் செய்யும் ஒரு விஷயத்திற்கு பையனின் வயது காரணமாக – கண்டிக்கத்தக்கதே ஆனாலும் – இப்படி தண்டிக்க வேண்டுமா என்று தோன்றியது. வண்டியின் பின்பகுதியில் நின்று கொண்டிருந்த நான், ஓட்டுனரிடம் “அடிக்காதீர்கள்” என்று சொல்லிப் பார்த்தேன். பலனில்லை. ஆச்சரியமாக, அடித்து அறிவுரை சொன்ன ஓட்டுனர் அந்தப் பையனை டிக்கெட் வாங்கியுள்ளானா என்று நடத்துனரிடம் உறுதிப்படுத்திக்கொண்டு மீண்டும் பேருந்தில் ஏற அனுமதித்தார்.

அவமானத்தில் குறுகி நின்ற அந்தப்பையனிடம், தனது பங்கிற்க்கு அறிவுரையை தொடர்ந்தார் நடத்துனர். அப்போது, பின் படிக்கட்டில் மேலும் சில இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு அச்சிறுவனை விட சில வருடங்களே அதிகம். நடத்துனரிடம், நான் கேட்டேன்: “அந்தப்பையனுக்குக் கிடைக்கும் முன்னுதாரணங்களைப் பாருங்கள்! அவர்கள் அப்படிப் பயணம் செயவதை, மேலும் அதை நீங்கள் அனுமதிப்பதைப் பார்த்துதானே அவன் வளர்கிறான். அப்படியிருக்க அவனை மட்டும் குற்றம் சொல்லி என்ன பயன்?!”. நடத்துனர் ஏதும் பதில் சொல்லவில்லை.

ஆகஸ்ட் 20, 2006

“உடம்பை வளர்த்து வெச்சுருக்கிறீங்க ….”

Filed under: உணவு,கவனித்தவை,சமுதாயம் — சுப்புடு @ 1:47 பிற்பகல்

உலகெங்கிலும் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் பரவலாக middle class மக்களிடம் பெருகி வரும் obesity எனும் பிரச்னையை சென்னையிலும் கவனித்து வருகிறேன். இதற்க்கு visual indicators என்று சொல்லப்படும் ‘விழிச்சான்றுகள்’ பல உள்ளன. அவற்றில் சில:

பொதுவாக தனிப்பட்ட வீடுகளில் இரட்டைக் கதவுகளில் ஒன்றைத்தான் திறந்து வைப்பார்கள். அப்படிப்பட்ட ஒற்றைக் கதவு வழியே நேராக உள்ளே நுழைவதற்கான சாத்தியம் பல பேருக்கு குறைந்து வருகிறது – பக்க வாக்கில்தான் நுழைய முடிகிறது! (புதிதாக கட்டப்படும் வீடுகளில் கதவுகளை அகலமாக வைப்பதற்கான காரணமும் இதுவாக இருக்குமோ?!)

சென்னை மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளின் அகல அளவு, பல வருடங்களுக்கு முன் நிர்ணயம் செய்யப்பட்டு இன்னமும் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. இவ்விருக்கைகளில் பேருந்தின் உள்ப்பக்கம் இரண்டவதாக அமரும் நபர்களின் பாடு திண்டாட்டம்தான்! அவர்களின் பின்புறங்களில் பாதி வெளியேதான் இருக்கிறது!

இன்று நான் பயணம் செய்த மாசற்ற பேருந்தில் இப்பிரச்னை, இருவருக்குள் கைகலப்பையே ஏற்படுத்தி விட்டது. உள்பக்கத்தில் அமர்ந்திருந்த பருமனான ஒருவர் ஜன்னல் பக்க பயணியை சற்றே தள்ள, “பாதிக்கப்பட்டவர்” அவரிடம் “உடம்பை வளர்த்து வெச்சுருக்கிறீங்க …. இப்படி தொந்தரவு பண்ணுகிறீர்களே!” என்று சண்டைக்கு வர …

ஆகஸ்ட் 17, 2006

ஆகத்து

Filed under: கவனித்தவை — சுப்புடு @ 6:19 பிற்பகல்

சில விஷயங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக உள்ளன. சில இல்லை. சென்னையின் பல் இடங்களில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப்பலகைகளில் “ஆகத்து” என்ற உபயோகத்தை கவனித்தேன். வடமொழி எழுத்தை உபயோகிக்கக்கூடாதென்பதில் மிகக்கவனமாக இருந்துள்ளனர். இது பாராட்டத்தக்கதே. அதே போல் ஆங்கில மாத பெயருக்கு பதிலாக, தமிழ் மாதப் பெயரை உபயோகித்திருக்கலாம் என்று தோன்றியது.

ஆகஸ்ட் 12, 2006

சமுதாயப் பொறியாளர்கள்

Filed under: கவனித்தவை,சமுதாயம்,பத்திரிக்கை தர்மம் — சுப்புடு @ 3:58 பிற்பகல்

சமீபத்தில் பெட்டிக்கடைகளில் கவனித்த பத்திரிக்கை தலைப்புச் செய்தி ஒன்று (அப்படியே தரவில்லை இங்கு – ஓரளவு முடிந்த வரை ஞாபகத்தில் இருந்து தந்துள்ளேன்):
“தாலி கட்டிக்கொள்ள விரும்பும் வயசுப் பையன்கள் – தமிழகத்தை உலுக்கும் ஹோமோ செக்ஸ் பிரச்னை”

அதே போல் அரசுப் பேருந்து ஒன்றின் பின்னால் ஒட்டப் பட்ட்டிருந்த ஒரு எய்ட்ஸ் குறித்த ஒரு அரசு பிரச்சாரம் -
“விபச்சாரத்தை நாடிப் போகாதே! அது வெட்கக் கேடான செயல்!”

கடைசியாக ஒரு விஷயம்: சமீபத்தில் வெளியான “உயிர்” படத்தில் நடித்து இப்போது எல்லாராலும் பேசி அலசப்படும் சங்கீதாவின் பேட்டியை குமுதத்திலோ ஆனந்த விகடனிலோ படித்தேன். அதில் பேட்டி கண்டவர் இப்படிப்பட்ட கேவலமான பாத்திரத்தில் நடிக்க எப்படி அவர் முன் வந்தார் என்று கேட்க, அதற்கு அவரும் இப்படிப்பட்ட சமூக அவலங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி நடித்ததாக குறிப்பிட்டார்.

பத்திரிக்கைகள் பொதுவாக செய்திகளை மக்களுக்கு தந்து அவர்களே எது நல்லது, எது இல்லை என்று முடிவு செய்ய விட வேண்டுமே தவிர, தங்கள் கருத்துக்கள் மூலம் அவற்றை மக்களுக்கு அவர்களே கற்பிக்கக்கூடது என்று தோன்றுகிறது.

ஆகஸ்ட் 8, 2006

பறை சாற்று

Filed under: கவனித்தவை — சுப்புடு @ 6:07 பிற்பகல்

இன்று காலை அடையாறு காந்தி நகர் பேருந்து நிறுத்தத்தில் சிறிது நேரம் காத்திருக்க நேர்ந்தது. வழக்கம் போல் எனது தடத்தைத் தவிர அனைத்து எண்களும் வந்து போயின. கிடைத்த நேரத்தில் இது வரை காணப்படாத ஒரு விஷையத்தை கவனித்தேன். மெரீனா பீச் வழியாக சென்ற அனைத்து பேருந்துகளிலும், வழிப்பலகைப் பட்டியலில் “கண்ணகி சிலை” என்று மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது. கண்ணகி சிலையை மீண்டும் கடற்க்கரைக்கு கொண்டு சென்றதை சம்மட்டி அடித்தாற்ப் போல் பொது மக்களுக்குச் சொல்ல விரும்பினால், இதை விடச்சிறந்த முறையில் சொல்ல முடியாதென்று தோன்றியது.

ஆகஸ்ட் 1, 2006

வணக்கம்

Filed under: பொதுவாக — சுப்புடு @ 5:06 பிற்பகல்

எனது முதல் வலைப்பதிவு. தமிழில் எழுதும் உணர்வையும், தமிழ் வலைவாசிகளையும் (வாசகர்களையும்) சென்றடையும் உணர்வையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை. தமிழ் நாட்டைப்பற்றிய எனது கண்ணோட்டங்களை, இவ்வலைப்பதிவின் மூலம் வெளிப்படுத்த முனைகிறேன். உங்களது ஆதரவு இதற்க்குக் கிடைக்கும் என்று முழுமையாக நம்புகிறேன்.

தமிழில் ஒரு வலைப்பதிவைத் தொடங்க சிறிது காலமாக என்னை ஊக்குவித்த எனது நண்பர்களுக்கு எனது நன்றி.

Theme: Rubric. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.